இலங்கை: பவுத்த பிக்கு போராட்டம் எதிரொலி- முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்கள் ராஜினாமா
கொழும்பு: இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரரின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக முஸ்லிம் ஆளுநர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அத்துரலிய ரத்ன தேரர் தமது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 359 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய இத்தாக்குதல் உலகை உறைய வைத்தது.
சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். அமைப்பு, இலங்கையில் முகாம்கள் அமைத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டிருந்தது. இதையடுத்து ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
அசாமிலிருந்து அருணாசலுக்கு 13 பேருடன் சென்ற இந்திய விமான படை விமானம்.. சீன எல்லை அருகே மாயம்
இப்படி கைது செய்யப்பட்டோருக்கும் முஸ்லிம் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் ஸாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தனர்.
இந்நிலையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் வெள்ளிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய முஸ்லிம் ஆளுநர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டி தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டம் தொடர்ந்ததால் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களருக்கும் இடையே இனமோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
மேலும் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பவுத்த பிக்குகள் போராட்டத்தில் குதிப்போம் என பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனாவும் எச்சரித்தது. இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆளுநர்கல் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஸாலி இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தனர். அதேபோல் ரிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் இணை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது எனவும் முடிவு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அத்துரலிய ரத்ன தேரர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் கண்டியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.