இலங்கை: சம்பளம் இல்லாத அமைச்சர்கள் பதவியேற்பு- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற கேண்டீன் இழுத்து மூடல்!
கொழும்பு: இலங்கையில் இன்று புதியதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஏற்கனவே இலங்கை அமைச்சர்களுக்கு ஊதியம் இல்லை; சிறப்பு சலுகைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் அரசியல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமரானார். ரணில் தலைமையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தில் ஏற்கனவே 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று மேலும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி கோத்தபயா மாளிகையில் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர்களும் துறைகளும்:
1. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
3. கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்
4. விஜயதாச ராஜபக்சே - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
5. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
6. நளின் பெனாண்டோ - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
7. டிரான் அளஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
8. ஹரின் பெனாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
9. மனூஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
ஏற்கனவே பதவியேற்ற 4 அமைச்சர்கள்:
1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்: வெளிவிவகாரம்
2. தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள்
3. பிரசன்ன ரணதுங்க: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
4. கஞ்சன விஜேசேகர: மின்சக்தி மற்றும் வலுசக்தி
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அமைச்சர்களுக்கான ஊதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான சிறப்பு சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் மதிய உணவு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கை நாடாளுமன்ற கேண்டீனை இழுத்து மூடுவது குறித்து விவாதிக்கப்படும் என கூறியுள்ளார் சபாநாயகர்.
படம்: நன்றி- https://www.thinakaran.lk/