இருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்
கொழும்பு: இருபிரிவினரிடையே மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் நான்கு நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 260க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கோரசம்பவத்தால் நிலைகுலைந்து போன இலங்கையில் மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. குண்டு வெடிப்பில் சேதமடைந்த தேவலாயங்களும் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய பதிவு காரணமாக இலங்கையின் மேற்கு பகுதியில் அமந்துள்ள சிலாபம் நகரில் இருதரப்பினருக்கு இடையில் பயங்கர கலவரம் மூண்டுள்ளது.
இதேபோல் ஹெட்டிபொல பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.இந்த மோதல் காரணமாக குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய ஊர்களில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊர்களில் செவ்வாய்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென இலங்கை அரசு அறிவித்துள்ளது.