இலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை
கொழும்பு: இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த நாட்டு ஜனாதிபதி ஆணைக் குழுவின் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி தேவாலயங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர வைத்தது இந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள்.
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது. ஆனால் இந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள் இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதேநேரத்தில் மகிந்த ராஜபக்சே சகோதரர்களால்தான் இலங்கையை பாதுகாக்க முடியும் என்கிற கருத்தும் ஆழமாக விதைக்கப்பட்டது.
மேலும் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கை உளவு அமைப்பும் முன்னரே எச்சரித்திருந்தன; ஆனால் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனை மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக மறுத்து வந்தார். இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு செய்தது.
இதனால் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகவேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தம்மால் விசாரணைக் குழு முன்பாக ஆஜராக முடியாது என மைத்திரிபால சிறிசேன பிடிவாதம் பிடித்தார். இந்த நிலையில்தான் இன்று மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.