யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியான வாக்குப் பதிவு!
Recommended Video
யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாகவும் வேகமான வாக்குப் பதிவும் நடைபெற்றது. தமிழர் பகுதிகளில் 65% முதல் 75% வரை வாக்குகள் பதிவாகி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சிங்களர் வாழும் தென்னிலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்களின் மலையகம் மற்றும் ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்கு நடுவே சுமூகமான வாக்குப் பதிவு நடைபெற்றது. மல்லாகம், தெல்லிப்பளை, கீரிமலை, காங்கேசன்துறை, ஊரணி, பலாலி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு புகார்கள் பதிவாகி இருக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதேபோல் கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 65% முதல் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.