இலங்கை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- சில இடங்களில் தாமதம்- முதலில் தபால் வாக்குகள்!
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. பெரும்பாலான மாவட்டங்களில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வரிசைகளில் நின்றிருந்தாலும் யாரும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
உடனடியாக வாக்குச் சீட்டு பெட்டிகள் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சில இடங்களில் சற்று தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தபால் வாக்கு முடிவுகள் இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கும் அறிவிக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு 18-ந் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து முடிவுகளையும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் திங்களன்று காலைக்குள் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு தேசப்பிரிய கூறினார்.