கோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி!
கொழும்பு: எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் இலங்கை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சேவை உடனே அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சேவுக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவில் அதிபர் பதவிக்கு போட்டியிட பலரும் முயற்சிக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சே தாமே போட்டியிடுவேன் என அடம்பிடித்து வருகிறார்.
அவருக்கு எதிராக அமெரிக்காவில் பல போர் குற்றச்சாட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அத்துடன் கோத்தபாய ராஜபக்சேவின் அமெரிக்க குடியுரிமை இன்னமும் ரத்து செய்யப்படவும் இல்லை.
இதனால் கோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுஜன பெரமுனவில் கோத்தபாய ஆதரவு- எதிர்ப்பு கோஷ்டிகள் உருவெடுத்துள்ளன. இதனால் கோத்தபாய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்துவிடுங்கள் என மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும் பெரமுனவின் மாநாட்டில் அதிபர் வேட்பாளரை மகிந்த ராஜபக்சே அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.