இரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல்
கொழும்பு: கோத்தபாய ராஜபக்சேவின் இரட்டை குடியுரிமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்களான காமினி வியங்கொட, சந்த்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக கோத்தபாய சட்டவிரோதமாக இலங்கை குடியுரிமை பெற்றிருக்கிறார்; அவரது அமெரிக்கா குடியுரிமை ஆவணங்களை மறைத்து மோசடி செய்தார் என ஒரு வழக்கு தொடரப்பட்டது. காமினி வியங்கொட, சந்த்ரகுப்த தெனுவர ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்தனர்.
இதனால் அதிபர் தேர்தலில் கோத்தபாய போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இவ்வழக்கை இலங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் கோத்தபாய தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்கிற நிலை உருவானது.
இந்நிலையில்தான் காமினி வியங்கொட, சந்த்ரகுப்த தெனுவர இருவரும் கோத்தபாயவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த காரணத்தால் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் இந்த கொலை மிரட்டல்களை விடுத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்சே பதவி வகித்த போதுதான், வெள்ளை வேன்கள் மூலம் தங்களுக்கு எதிரானவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்தகைய ஒரு சூழ்நிலை மீண்டும் ஏற்படுமோ என அஞ்சுவதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.