ராஜபக்சேவை பிரதமராக ஏற்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு.. சம்மந்தன் சந்திப்பில் நடந்தது என்ன?
கொழும்பு: இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்க முடிவு செய்யவில்லை.
முன்னாள் இலங்கை அதிபரான, ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா திடீரென பிரதமராக நியமித்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை பறித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார்.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ரணில் கட்சிக்கே அதிக உறுப்பினர் பலம் உள்ளது. ஆனால் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை.
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி.. படேல் பிறந்த நாளில்.. தமிழிலிருந்து பிறந்த புதிய மொழி.. வாவ்!!!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு
எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மற்ற சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டால்தான், ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் ரணில் மற்றும் ராஜபக்சே உள்ளனர். இந்த நிலையில்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ராஜபக்சே.
பிரதமராக ஏற்க முடியாது
ராஜபக்சே பிரதமர் அலுவலகத்திற்கு சம்மந்தனை அழைத்ததாகவும், ஆனால், சம்மந்தன், அதை தவிர்த்துவிட்டு ராஜபக்சே அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றதாகவும் தெரிகிறது. பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உடன்பாடு இல்லை என்பதால்தான், பிரதமர் அலுவலகம் செல்லாமல், எம்.பி. என்ற அளவில், ராஜபக்சேவை சந்தித்ததாக அக்கூட்டமைப்பு எம்.பியான, சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சி பலம்
இதன் மூலம், ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று தெரிகிறது. இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய அணி தமிழர் தேசிய கூட்டமைப்புதான். ரணில், சிறிசேனா&ராஜபக்சே கட்சிகளையடுத்து, 16 எம்.பி.க்களுடன் 3வது இடத்தில் உள்ளது தமிழர் தேசிய கூட்டமைப்பு.
வெளிப்படையாக கூறவில்லை
இருப்பினும் இழுபறி சூழல் நிலவுவதால், இப்போதைக்கு வெளிப்படையாக எதையும் அறிவிப்பது நல்லதில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழர் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே, காலம் கனியும்போது, ரணிலுக்கு ஆதரவு என்பதை தமிழர் தேசிய கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்க உள்ளது.