இந்தியாவிடம் இருந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெற இலங்கை திடீர் முடிவு!
கொழும்பு: இந்தியா வசம் இருக்கும் திருகோணமலை எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை திரும்பப் பெற இலங்கை அரசு திடீரென முடிவு செய்துள்ளது. இதனால் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்குக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால் இலங்கை அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள், இந்தியாவுக்கு நட்புக் கரம் நீட்டியபடியே அடுத்தடுத்து முதுகில் குத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ராஜபக்சே சகோதரர்கள் நடந்து கொண்டனர்.
இந்தியா கடும் அதிருப்தி
கிழக்கு கொள்கலன் முனையத்தை அமைக்க இந்தியா-இலங்கை- ஜப்பான் மூன்று நாடுகளும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சே சகோதரர்கள் அரசு தெரிவித்தது. இதற்கு இந்தியாவும் ஜப்பானும் கடும் அதிருப்தியை தெரிவித்தன.
கச்சத்தீவு அருகே சீனா
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு அருகே 3 தீவுகளில் பிரமாண்ட காற்றாலை திட்டத்தை சீனாவிடம் கொடுத்தனர் ராஜபக்சே சகோதரர்கள். இந்த திட்டத்தை இந்தியா மிகவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்தியாவுக்கு இந்த திட்டத்தை தராமல் சீனாவசம் ஒப்படைத்தது இலங்கை. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக மிக நெருங்கிய கடுமையான அச்சுறுத்தலாகும்.
திருகோணமலை எண்ணெய் கிடங்குகள்
தற்போது திருகோணமலையில் இந்தியா வசம் இருந்த எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை திரும்பப் பெறுகிறது இலங்கை. ஆதிதமிழர் காலத்தில் இருந்தே திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர பாதுகாப்புக்கு மிக முக்கியமான இடம். இந்த திருகோணமலையில் 2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் ஏராளமானவை உள்ளன. இதில் ஒரு பகுதியை இத்தனை காலம் இந்தியா பயன்படுத்தி வந்தது.
சீனா ஆதிக்கம்
இலங்கை இப்போது திடீரென இந்தியா வசம் இருக்கும் இந்த சேமிப்பு கிடங்குகளை தாங்களே வைத்துக் கொள்வோம் என அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது இலங்கை. இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் அடுத்தடுத்து இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் படுதீவிரமாக இருந்து வருகின்றனர். இதனால் இலங்கையில் சீனாவின் கை ஓங்கும் நிலையை ராஜபக்சே சகோதரர்கள் உருவாக்கி உள்ளனர்.