அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. அதிபர் கோத்தபய ராஜபக்ச
கொழும்பு: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராட தடுப்பு மருந்தை பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன. அதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் கடந்த வாரம் கொரோனா முன் கள பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு போடப்பட்டன. இந்த நிலையில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர இலங்கை அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதை இந்தியா வரவேற்றது. இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அடுத்த வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்க பெறும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறுகையில் இந்த மாதம் 27-ஆம் தேதி மேல் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கு நாம் காத்திருக்க வேண்டியது இல்லை.
அடுத்த வாரத்தில் இந்தியாவிடம் இருந்து பெறப்படும். ரஷ்யா, சீனாவிடம் இருந்தும் தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம் என்றார். இலங்கை, பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பப்படும் என இந்தியா தெரிவித்திருந்தது. அதன்படி நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் தடுப்பு மருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
இலங்கையில் கொரோனாவால் 52,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 278 பேர் பலியாகிவிட்டனர்.