இந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே
கொழும்பு: வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முதலிடம் கொடுப்போம்; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டோம் என்று இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகாலம் கொடுத்தது தவறு என்றும் கொலம்பகே கூறியுள்ளார்.
இலங்கையில் புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். புதிய வெளிவிவகார செயலாளராக முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் ஆலோசித்திருந்தனர்.
கொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியா நடத்துவது நியாயமற்றது.. சிறுமி கிரேட்டா ஆவேசம்
இந்தியா நலனே முக்கியம்
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜயநாத் கொலம்பகே அளித்த பேட்டியில், வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது; இந்தியாவிடம் நாங்கள் ஏராளமான உதவிகளைப் பெற்று வருகிறோம் என்றும் கொலம்பகே கூறினார்.
கோத்தபாய அறிவுரை
பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கே முதல் முன்னுரிமை தர வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் தமக்கு அறிவுறுத்தி இருக்கிறார் என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார். இந்தியாவின் கேந்திர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடுநிலையான வெளியறவு கொள்கையைத்தான் இலங்கை கடைபிடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சீனாவுக்கு கொடுத்தது தவறுதான்
மேலும் இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு கொடுத்தது தவறான நடவடிக்கை என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார். கொலம்பகேவின் இந்த வாக்குறுதி மேம்பாக்காக இந்தியாவுக்கு சாதகமானதாக தோன்றினாலும் ராஜபக்சே சகோதரர்களின் கடந்த காலம் என்பது முழுமையான சீனா சார்பு நடவடிக்கைகளாகத்தான் இருந்தன என்பதை இந்தியா மறுக்காது.
மகிந்தவின் சீனா ஆதரவு முகம்
2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் வரைக்கும் இந்தியாவின் உதவியை முழுமையாக நம்பி இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ஆனால் காலப்போக்கில்முழுமையாக தம்மை சீனாவின் ஆதரவாளராகவே உருமாற்றிக் கொண்டார் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுப்பதில் மகிந்த ராஜபக்சே படுமுனைப்பாக இருந்தார்.
2015-ல் இந்தியா மீது புகார்
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் ராஜபக்சே மீது இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது. 2015 இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்விய போது, இந்தியாதான் தமது தோல்விக்கு காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் ராஜபக்சே. தமக்கு எதிராக மைத்ரிபால சிறிசேனாவை ஜெயிக்க வைத்ததில் இந்தியாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது என்றும் ராஜபக்சே புலம்பினார்.
நம்பகமற்ற ராஜபக்சே சகோதரர்கள்
இப்போது அதிபராக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சே பதவியில் இருக்கின்றனர். இவர்களது ஆட்சியின் தொடக்க காலத்தில் இப்போது இந்தியாவுக்கு நண்பர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர். ஆனாலும் மத்திய அரசு இவர்களை அவ்வளவு எளிதாக நம்பப் போவதும் இல்லை. ராஜபக்சே சகோதரர்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கு ஆதாயம் கிடைக்கும் எனில் அவர்கள் உடனடியாக சீனா பக்கம் சாய தயாராகத்தான் இருப்பார்கள் என்பதை இந்தியாவும் நன்கே உணர்ந்து வைத்திருக்கிறது என்பதுதான் வரலாறு.