ஈஸ்டர் குண்டுவெடிப்பு.. இலங்கை உளவுத் துறை தலைவர் அதிரடி நீக்கம்
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறியதாக இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்துவிட்டதாக உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்தில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை பெரிதாக கருதவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவின் எச்சரிக்கையை கேட்டு கவனமாக இருந்திருந்தால் இந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இலங்கை போலீஸ் துறை தலைவர் உள்பட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் தரப்பு வலியுறுத்தப்பட்டது.
சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம்? திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பதில்
இந்த நிலையில் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு குறித்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆலோசனை கூட்டத்தை அதிபர் சீறிசேனா கூட்டவில்லை. அவ்வாறு கூட்டியிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் மீது சீறிசேனா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதற்கான காரணத்தை அதிபர் அலுவலகம் கூறவில்லை. எனினும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்து விட்டதாக பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் சாந்தா கோட்டேகோடா தெரிவித்துள்ளார்.