இனப்படுகொலை அச்சத்தில் வாழும் நீர்க்கொழும்பு முஸ்லிம்கள்.. இரவில் தொழுகை நடத்த முடியாமல் தவிப்பு!
நீர்க்கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் நீர்க்கொழும்பு ஒரு சூனிய பிரதேசமாக உருமாறி உள்ளது. இங்குவாழும் முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல்களை இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். நடத்தியது. இதில் 359 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஐ.எஸ். இயக்கத்தினரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் திடீரென நீர்க்கொழும்பு பகுதியில் முஸ்லிம்களை குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் முஸ்லிம்கள் கிராமங்கள், பள்லிவாசல்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன... பல இடங்களில் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இத்தனையும் ராணுவத்தினர் கண்முன்னேயே அரங்கேறிய கொடூரங்கள். இதனால் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது நீர்க்கொழும்பு பகுதிதான். சுற்றுலா பயணிகளால் எப்போதும் வீதிகள் நிறைந்திருக்கும் நீர்க்கொழும்பு இப்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கே இருந்த பிரபல உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்கள் தங்களது தொழில் நிறுவனங்களை திறக்க அச்சப்படுகின்றனர். புனித ரம்ஜான் நோன்பு மாதத்துக்கான இரவு தொழுகைகளை பள்ளிவாசல்களில் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு முழுவதும் மர்ம நபர்கள் தொடர்ந்து நடமாடி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையில் இன்னொரு கறுப்பு ஜூலை.. அதாவது 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது போன்ற ஒரு பேராபத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளதாக சிங்கள பேரினவாதிகள் பேசிவருவது அம்மக்களிடத்தில் இன்னொரு இனப்படுகொலை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.