ரணகளத்தில் ஏற்பட்ட காதல்.. மனமொத்த தம்பதிகளாக.. தமிழும் சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்
Recommended Video
கொழும்பு: ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சமும் ஆகாது.. ஜென்ம விரோதிகள்.. இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் கல்யாணம் பண்ணிக் கொண்டு, கைக்குழந்தையுடன் சந்தோஷமாக இருப்பார்கள் என்று யாராலும் நினைச்சு கூட பார்க்க முடியாது.. அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் கௌரி மலர் - ரோஷன் ஜெயதிலகா!
2009-ல் நடந்த உள்நாட்டு போரில் தொலைந்து போன ஆயிரக்கணக்கானோரில் கௌரியின் அண்ணனும் ஒருவர். கௌரிக்கு அண்ணன் என்றால் உயிர்! கண்டுபிடிப்பது கஷ்டம் என்றும் தெரிந்தும் அண்ணனை தேடி சென்றார் இளம்பெண் கௌரி.
அந்த சமயத்தில்தான், விடுதலை புலிகளின் பிடியில் கௌரி சிக்கி கொண்டார். புலிகள், கௌரிக்கு பயிற்சி தந்து தங்களுடனேயே தமிழ் போராளியாக வைத்து கொண்டனர்.
ரோஷன்
இந்தசமயத்தில்தான், இலங்கை ராணுவ வீரரான ரோஷனின் அறிமுகம் கௌரிக்கு ஏற்பட்டது. சிங்களர், தமிழர் வேறுபாடின்றி காதல் மலர ஆரம்பித்தது. 2014-ல் கல்யாணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது.
பரம எதிரி
இதை பற்றி பிபிசி சேனலிடம் ரோஷன் சொல்லும்போது, "வவுனியாவை சேர்ந்த நான், எல்டிடிஇ என்ற வார்த்தையைவிட புலிகள் என்ற வார்த்தையைதான் அதிகம் கேட்டேன். அவர்கள்தான் என் பரமஎதிரி என்பதால் பயங்கர வெறுப்பு இருந்தது" என்கிறார்.
அண்ணன்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண் போராளி கௌரி, "சிங்களர்களை நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. அவர்கள் மோசமானவங்க என்பதால், எங்களை கொன்றுவிடுவார்கள் என்று நினைத்தேன். இப்பகூட என் அண்ணன் உயிரோடு இருக்கிறாரா இல்லையான்னு தெரியாது, ஆனா கடவுள் என்கிட்ட என்ன வேணும்னு கேட்டால் எங்க அண்ணன்தான் வேணும்னு சொல்லுவேன்.
சிங்கள கோயில்
என் குழந்தையுடன் இப்போ சந்தோஷமா இருக்கோம். அவளுக்கு 11 மாசம் ஆகிறது.. தமிழும் சொல்லி தருகிறோம். பவுத்த கோயில், சிங்கள கோயிலுக்கும் அழைத்து செல்கிறோம்... எந்தவித வேறுபாடும் இல்லாமல் குழந்தையை வளர்க்கிறோம்" என்று சொல்கிறார்.
பாராட்டு
போர்க்களத்தில் பூக்கள் பூப்பது அரிதானது.. பூத்த பூக்கள் மனம் விட்டு பிரகாசிப்பது அதை விட அரிதானது.. அத்தகைய அரிய தம்பதிகளாக வாழ்ந்து வரும் கெளரி மலர் - ரோஷன் தம்பதியினர் தமிழர் - சிங்களர் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாறியுள்ளது பாராட்டுக்குரியதே.