சுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்
கொழும்பு: தங்களது தனிப்பட்ட நலனுக்காக இலங்கை விவகாரத்தை தமிழக அரசியல் பயன்படுத்தி வருவதாக இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்ற உடனேயே நாமல் ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசியல் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும் தமிழக அரசியல் தலைவர்கள்தான், இலங்கையில் தமிழர்-சிங்களர் இனங்களுக்கு இடையே பகைமையை மூட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தமிழக அரசியல் தலைவர்களை விமர்சித்து என்.டி.டிவி சேனலுக்கு நாமல் ராஜபக்சே பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது:
இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கையில் நிலையான அரசாங்கம் அமைவதுதான் இந்தியாவுக்கு நல்லது. வெளியுறவு கொள்கைகளில் பிரதமர் மோடி முற்போக்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறார்.
இது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு!
தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், தங்களது சுயநலனுக்காக இலங்கை விவகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் இதுவரை என்ன செய்துவிட்டனர்?
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்தான். ஆனால் இதனை தமிழர்-சிங்களர் யுத்தமாக சித்தரித்தது தவறானதாகும். இவ்வாறு நாமல் ராஜபக்சே கூறினார்.