ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு- இந்தியாவுக்கு வருகை தர அழைப்பு!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு ரணில் விக்கிரமசிங்கே வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
இலங்கைக்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டின் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்புகள் நள்ளிரவை தாண்டியும் நீடித்தன என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு ரணில் வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை பகிர்ந்து கொண்டார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். மேலும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
மேலும் கண்டிய நடன அக்கடமி, இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக காலி, கண்டி மற்றும் நுவரெலியாவில் 300 வீடுகள், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்த வீடுகள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை மக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் ஆழமான, நிலையான நட்புறவை வலியுறுத்தும் திட்டங்களை ரணில் விக்கிரமசிங்கேவுடன் இணைந்து தொடங்கி வைத்ததில் பெருமகிழ்வடைகின்றேன் என கூறியுள்ளார். இதனிடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை மலையகத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேசினார்.
கொழும்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அல்சப்ரி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பான சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்துக்கு- ஐ.எம்.எப்.க்கு இந்தியா தாமதம் இல்லாமல் அனுப்பி விட்டது. மற்றவர்களுக்காக இந்தியா காத்திருக்கவில்லை என குறிப்பிட்டார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
மேலும் இந்திய வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் தேவைகள் குறித்தும் ஆராய்வது முக்கியம். தமிழர் பிரச்சனைக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை செயல்படுத்த வேண்டும்; இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும். அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இலங்கையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்- உற்சாக வரவேற்பு- தமிழ் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சு!