யு.எஸ். ஆதரவுடன் அதிபர் தேர்தலில் கோத்தபாய? மகிந்தவின் சந்திப்பு எழுப்பும் கேள்விகள்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் ஆதரவுடனேயே கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறாரா? என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
ஈஸ்டர் தாக்குதல்களால் இலங்கையே பேரதிர்ச்சியில் உறைந்து கிடந்த போது அதிபர் தேர்தலை பற்றி பேசியவர் கோத்தபாய ராஜபக்சே. அப்போதே அதிபர் தேர்தலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும் தாம் அமெரிக்காவின் குடியுரிமையை துறப்பதாகவும் அடுத்தடுத்து கூறி வந்தார் கோத்தபாய. இதனால் ராஜபக்சே குடும்பத்தினருக்கும் ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைப்படையினருக்குமான தொடர்புகளும் ஒரு பக்கம் அம்பலமாகின.
அதேநேரத்தில் அமெரிக்காவில் கோத்தபாய மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அமெரிக்கா இதில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இலங்கை வந்த அமெரிக்காவின் விசாரணை அதிகாரிகளும் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது சர்ச்சையானது.
இந்நிலையில் தென், மத்திய ஆசிய விவகாரஙளுக்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கை வருகை தந்தார். அவரை மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பானது கோத்தபாய ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே அறிவிப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக நடைபெற்றது. இதனால் அமெரிக்காவின் ஆதரவுடனேயே கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதாக சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.