ராஜபக்சேவுக்கு வாழ்த்து.. ரணிலுக்கு ஆதரவு.. தமிழ் எம்பி வடிவேல் சுரேஷ்
கொழும்பு : தமிழ் எம்.பி.யும் துணை அமைச்சருமான வடிவேல் சுரேஷ் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்ததாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.
இலங்கையில் யார் பிரதமர் என்ற போட்டிக்கு முடிவு வந்துள்ளது. நாடாளுமன்ற சபாநாயகரின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேவிற்கு கூடுதல் எம்.பி.களின் ஆதரவு தேவைப்படுகிறது. ரணில் மற்றும் ராஜபக்சே தமிழ் எம்.பி.களின் ஆதரவைக் கோரி வருகின்றனர். பெரும்பாலான தமிழ் எம்பிகளின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு இருக்கிறது.
இந்நிலையில் ரணில் கட்சியை சேர்ந்த தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷ் புதிய பிரதமர் ராஜபக்சேவை சந்தித்து வாழ்த்துக்களை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வடிவேல் சுரேஷின் ஆதரவு ராஜபக்சேவிற்கே என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் மறுத்துள்ளார் வடிவேல் சுரேஷ் எம்.பி.
"ராஜபக்சேவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும், நான் அவருடைய அரசில் துணை அமைச்சராக இருந்துள்ளேன். எனவே மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்து மத சமூக மதிப்புகளின் அடிப்படையிலேயே நான் அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன். அதுமட்டுமின்றி மலையக மக்கள் நலனுக்காக ராஜபக்சே செயல்பட்டுள்ளார்" என்றும் வடிவேல் சுரேஷ் கூறினார். தான் ஐக்கிய தேசிய கட்சியிலேயே தொடர்வதாகவும் கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.