வந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்
கொழும்பு: இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர 2 விமானங்கள் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விமானங்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஏஐ 1202 கொழும்பு முதல் பெங்களூரு வரை ஜூன் 15ம் தேதி இயக்கப்படும். ஏஐ 0282 கொழும்பு முதல் டெல்லி-லக்னோ-கயா வரை ஜூன் 22ம் தேதி இயக்கப்படும் என்று, இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சர்வதேச லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆபரேஷன் வந்தே பாரத் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மே 7ம் தேதி வந்தே பாரத் முதல் கட்டம் துவங்கியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபியில் இருந்து புறப்பட்டது, அதைத் தொடர்ந்து அதே விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் துபாயிலிருந்து கிளம்பியது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவும் மாலத்தீவிலிருந்து மக்களை அழைத்து வந்தது.
லண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்
இதுவரை, இரு கட்டங்களாக 45000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். மொத்தம் 1 லட்சம் பேரை பல நாடுகளிலிருந்தும் அழைத்து வருவது இலக்கு ஆகும்.