கொரோனாவை வென்றதா இலங்கை?.. 3 மாதம் ஆகிவிட்டது.. சமூக பரவல் இல்லை.. எப்படி சாத்தியம்!
கொழும்பு: கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுத்துவிட்டோம் என இலங்கை அரசு மார்தட்டி கொண்டுள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு சமூக பரவல் மூலமாக யாருக்கும் பரவல் இல்லை. இத்தனைக்கும் ஜூன் மாதம் முதல் ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
உலகமே கொரோனாவை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறி கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சுமார் 14 லட்சத்தை கடந்துவிட்டது. தினமும் 50 ஆயிரம் பேருக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொத்துக்கொத்தாக பல இடங்களில் கொரோனா பரவி வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளைப் போலத்தான் இலங்கையிலும் மார்ச் மாதம்கொரோனா ஊடுருவியது. இதை தடுக்க உடனடியாக அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. மொத்த நாடும் முடங்கியது. . நாடாளுமன்ற தேர்தலும் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கிய புதிய கொரோனா கேஸ்கள்.. உலகளவில் இந்தியா 2ஆவது இடம்
வெறும் 600 பேர் தான்
இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2 ஆயிரத்தை கடந்த நிலையில் அதன்பிறகு குறைய ஆரம்பித்தது. யாரும் தொற்று பரவவில்லை. மொத்தம் 2,794 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 11 பேர் பலியாகினர். தற்போதைய நிலையில் வெறும். 600 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமாகி வீட்டுக்கு திரும்பிவிட்டனர்,
2வது அலைக்கு வாய்ப்பு
கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததால், கடந்த ஜூன் முதல் இலங்கையில் ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. மக்கள் இயல்பாக வேலைக்கு செல்கிறார்கள்.இலங்கையில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. இந்நிலையில், இந்நாட்டில் கொரோனா நோய் தொற்றின் 2வது அலை தோன்றக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும்படி எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
5 ஆயிரம் பேர் தனிமை
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஷேவேந்திர சில்வா கூறுகையில், "இலங்கையில் ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து ஒருவர் கூட கொரோனா சமூக பரவல் மூலமாக பாதிக்கப்படவில்லை. கொரோனாவின் சமூக பரவலை இலங்கையில் முழுமையாக தடுத்துவிட்டோம்.. கொரோனா 2வது அலை உருவாகக்கூடும் என பலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கடந்த 14ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து குடிமக்கள் திரும்பி வருவதை அரசு நிறுத்தி இருக்கிறது. நாட்டிற்கு திரும்பி வந்த 20 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 5 ஆயிரம் பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்,'' என்றார்.
நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கடந்த ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் கொரோனா பரவல் காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.