ஈழத் தமிழர் வாக்குகளை அறுவடை செய்வார்... அச்சத்தால் ரணிலை சிறையிலடைக்க சிறிசேனா-ராஜபக்சே சதி?
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர் வாக்குகளை எங்கே ரணில் விக்கிரமசிங்கே மொத்தமாக அறுவடை செய்துவிடுவாரோ என்கிற அச்சத்தால் அவரை தேர்தலில் போட்டியிடவிடாமல் சிறையில் அடைக்க சதிமுயற்சிகள் நடப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மென்மைப் போக்கை கடைபிடித்தவர் ரணில் விக்கிரமசிங்கே என்பது மறுப்பதற்கில்லை. 2002-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய திருப்பத்துக்குக் காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இப்பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ஒரு புதிய கூட்டாட்சி முறை வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கூட்டாட்சி முறையையும் ரணில் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் இருந்தார்.
ஆனால் அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் உள்ளடிவேலைகள், ராணுவத்தினரின் குறுக்குசால்களால் இம்முயற்சிகள் தடைபட்டன. பொதுவாக ரணில் ஆட்சிக் காலம் என்பது தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருந்தது.
இலங்கை: அதிபர் தேர்தலில் மீண்டும் சிறிசேனா? முட்டுக்கட்டையாக இருக்கும் ரணில் எந்த நேரத்திலும் கைது?
புலிகளின் புறக்கணிப்பு
இந்த சூழலில் 2005-ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே ஆதரவு அளிப்பார்கள் என்கிற நிலையும் இருந்தது. இருப்பினும் தங்களுடனான சமாதான பேச்சுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாத அதிருப்தியில் இருந்த விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்கள் அதிபர் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர். இதனால் ஈழத் தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை.
அதிபரான ராஜபக்சே
இது மகிந்த ராஜபக்சே எனும் போர்க்குற்றவாளிக்கு சாதகமாகப் போனது. இதனால் விடுதலைப் புலிகள் இயக்கமே அழிந்து போன துயரமும் ஏற்பட்டது. தற்போதும் கூட அன்று 2005-ல் ரணிலை விடுதலைப் புலிகள் ஆதரித்திருந்தால் அல்லது ஈழத் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால் ஈழத்தின் களநிலைமை வேறாக இருந்திருக்கும் என்கிற கருத்தும் விவாதமும் உண்டு.
ரணிலே அதிபராக வாய்ப்பு
தற்போதைய நிலையில் ஈழத் தமிழர்களது வாக்குகள் முன்னெப்போதையும்விட தமக்கே அதிகம் கிடைக்கும் என்பதில் ரணில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தாமே போட்டியிட விரும்புகிறார். எதிர்தரப்பில் தமிழர்களை கொன்றுகுவித்த கோத்தபாய ராஜபக்சே வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது இன்னும் தமக்கு சாதகம் என்பது ரணிலின் கணக்கு.
ரணிலுக்கு எதிராக சதி
இதனை முறியடிக்கத்தான் இப்போது சிறிசேனா- மகிந்த ராஜபக்சே-கோத்தபாய ராஜபக்சே- ஜேவிபி என அத்தனை சிங்கள பேரினவாதிகளும் கை கோர்த்து நிற்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளின் பொதுவேட்பாளராக மீண்டும் சிறிசேனாவே களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
ரணிலை தடுக்க கைது?
அப்படி சிறிசேனா களமிறங்கினால் தமிழர் தரப்பு பிரதிநிதி என்கிற நிலைக்கு ரணில் உருவெடுப்பார். இதனால் ஒட்டுமொத்த தமிழர் வாக்குகளுமே ரணிலுக்கே செல்லும். இது இலங்கையில் பெரும் அரசியல் மாற்றத்துக்கு அடிகோலும். இந்த அச்சத்தால்தான் ரணில் விக்கிரமசிங்கேவை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்க அவரை மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க ஒட்டுமொத்த சிங்கள அரசியல்வாதிகளும் கை கோர்த்து நிற்கின்றனர்.