அரியாசனத்தில் அண்ணன்-தம்பி...சர்வாதிகார தேசமாக உருமாறும் இலங்கை..என்னவாகும் ஈழத் தமிழர் எதிர்காலம்?
கொழும்பு: இலங்கையில் 2020-ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள பெரும்பான்மை தேசம் என்பதை மட்டுமல்ல அந்த நிலம் சர்வாதிகார பூமியாக உருமாறப் போகிறது என்பதையும் சொல்லிவிட்டு நிற்கிறது.
இலங்கையில் தமிழர், சிங்களர் என இரு தேசிய இனங்கள் இருந்தாலும் ஆட்சி அதிகாரம் சிங்களர் வசமே இருந்ததால் தமிழர் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இலங்கைத் தீவின் தாய்குடி மக்களான தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டனர்.
இனப்படுகொலையின் உச்சகோரத்தால் தனிநாடு கோரி தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்த ஆயுதப் போரும் 20009-ல் முடித்து வைக்கப்பட்ட நிலையில் இப்போது சர்வதேச நாடுகளின் வேட்டைநிலப்பரப்பாக இலங்கை மாறி நிற்கிறது.
ஐஐடி கல்வி நிறுவன நியமனங்களில் இடஒதுக்கீடு ரத்து செய்ய பரிந்துரைப்பதா? வேல்முருகன் கடும் கண்டனம்
இலங்கையில் சர்வதேச நாடுகள்
இலங்கையை முழுமையாக கபளீகரம் செய்ய சீனா முயற்சிக்கிறது; இந்தியா இதனை தடுக்க போராடுகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவும் தம் பங்குக்கு கால்பதிக்க துடிக்கிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்றது.
மகிந்த ராஜபக்சே
இலங்கையின் மாஜி அதிபரான, போர்க்குற்றங்களுக்குள்ளான மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் தேர்தல் முடிவுகள், தமிழர் தேசம், சிங்கள தேசம் என பிளவுபட்டுதான் நிற்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியது. ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியில் மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை சிங்களர் ராஜபக்சேவை ஏகமனதாக தேர்வு செய்தனர்.
ராஜபக்சே சகோதரர்கள்
இலங்கையின் அரியாசனத்தில் அதிபராக கோத்தபாய ராஜபக்சே.. பிரதமராக அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சே என கோலோச்சுகிறார்கள். இலங்கையின் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழரை படுகொலை செய்த 2009-ம் ஆண்டு யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்தவர்தான் கோத்தபாய ராஜபக்சே. பேரினவாதிகளின் கைகளில் இலங்கையின் ஆட்சி அதிகாரம் நிரம்பிக் கிடக்கிறது.
இரு சர்வாதிகாரிகள்
இத்தகைய குடும்ப ஆதிக்கம் என்பது இலங்கையில் ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல.. எந்த நிலைமையிலும் சிங்களருக்கும் எதிராகவும் மாறும். ஏனெனில் இருவருமே சர்வாதிகார மனோபாவம் கொண்டவர்கள். இதனால்தான் இலங்கை சர்வாதிகார தேசமாக மாறுவதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். அதற்கேற்ப அரசியல் சாசன திருத்தங்கள், தமிழர் அதிகாரம் மறுப்பு உள்ளிட்டவைகளை கையில் எடுத்திருக்கின்றனர் ராஜபக்சே சகோதரர்கள்.
ஈழத் தமிழர் கையறு நிலை
தெற்காசியாவின் குட்டி தீவு தேசம், சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி சர்வமும் நாசமாகுமா? இந்த இனப்படுகொலையாளர்களின் பிடியில் சிக்கி ஈழத் தமிழரின் சொற்ப வாழ்வும் சூறையாடப்படுமா? என்கிற கேள்விகளுக்கு விடைதெரியாமலேயே பிறக்கப் போகிறது 2021. சர்வதேசம்தான் இதற்கான தீர்வை சொல்ல வேண்டும் என்கிற கையறு நிலையில் ஈழத் தமிழர்கள் கதியற்று நிற்கின்றனர்!!