காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.. கருணாநிதி பேனர் முன்னிலையில் காங்கிரஸார் யாகம்!
சென்னை: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்று வேண்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி யாகம் வளர்க்கிறது. இந்த யாகம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான நாளை வரை நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜகவும் "எந்த விலை' கொடுத்தேனும் ஆட்சியை தக்க வைக்க துடித்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு எக்சிட் போல்கள் வெளியாகி வருகிறது.
இதில் பாஜக பெருவெற்றி பெறும் என்று அனைத்து தேர்தல் கணிப்புகளும் கூறி வருகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு பின்னால் பாஜக உள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் மஹா சண்டி யாகம் நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கல இசையுடன் இந்த யாகம் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கோ பூஜை, மகாகணபதி, மகாலட்சுமி, நவக்கிரகஹோமங்களுடன் காலை 9 மணிவரை மகா சண்டி யாகம் நடைபெற்றது.
இன்று நடைபெறும் யாகத்தில் துர்கா கணபதி பூஜை, சங்கல்பம், மூல மந்திர ஹோமம், வேத பாராயணம், 64 யோகினி பலி பூஜை என இரவு 9 மணி வரை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மூன்றாம் நாளான 23-ம் தேதி வியாழக்கிழமை அதாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான நாளை அதிகாலை 4.30 மணிக்கு மங்கல வாத்தியம், விநாயகர் பூஜை, ஜெயதுர்கா ஹோமம், பூர்ணாஹுதி சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை காலை 6 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாகத்திற்காக பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக கடந்த மாதம் சோனியா காந்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டி யாகம் நடத்தினார். இந்த யாகத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.