இப்படியே போனா எப்படிப்பா.. ரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிப்படும் தமிழகம்
சென்னை: ரயில்வே துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களோ அல்லது பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட நிதியோ இல்லாதது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ரயில்வே மண்டலம் தெற்கு ரயில்வே மண்டலம்தான். இது 1951ம் ஆண்டு ஏப்ரல் 14 -ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத மண்டலமாக இருப்பது தெற்கு ரயில்வேதான். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரயில்வேத் துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ.1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடான ரூ.2932.61 கோடியை விட ரூ.34.28 கோடி குறைவாக ரூ.2,898.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களை புதுப்பிக்க ரூ 917 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு இல்லை
தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள், காவிரிப் பாசன மாவட்டங்கள், புதுச்சேரி ஆகியவற்றையும் தலைநகர் சென்னையையும் ஒன்றிணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரையோர ரயில்பாதை அமைக்கும் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
சுற்றுலா வளரும்
இந்தப் பாதை அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்களுக்கான பயணிகள் நெரிசல் குறைவதற்கும் அதே வேளையில் மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். ஆனால் 10 ஆண்டுகளாக இது வெறும் திட்டமாக மட்டுமே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையிலும் இதற்கு நிதி ஒதுக்கப்படாதது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் டூ கடலூர்
கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தின் கீழ் சென்னை மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான 70 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் நகரி வரையிலான 179 கிலோமீட்டர்கள் பாதை, 88 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அத்திப்பட்டு - புத்தூர் வரையிலான பாதை 91 கிலோமீட்டர்கள் அளவுக்கு ஈரோடு - பழனி பாதை, தூத்துக்குடி-மதுரை வரையிலான 143 கிலோ மீட்டர் பாதை, 60 கிலோமீட்டர் தூரத்திலான ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை. கூடுவாஞ்சேரி வரையிலான பாதை 36 கிலோமீட்டர் தூரம் அளவிலான மொரப்பூர் தருமபுரி பாதை ஆகிய ரயில் தடங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு கடந்த 2006 ம் ஆண்டே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறைந்த நிதி ஒதுக்கீடு
849 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்திற்கு ரூ.11,405 கோடிகள் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வெறும் 54 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மகிழ்ச்சி தரும் அம்சங்கள் இல்லை.