வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்!
நகை கடையில் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
பண்ருட்டி: "இந்த மாடல் நல்லா இல்லை, வேற காட்டுங்க" என்று நகைக்கடையில் நடித்து.. லாவகமாக நகைகளை லவட்டி கொண்டு ஓடிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி பகுதியில் மீனா ஜுவல்லரி என்ற நகை கடை இயங்கி வருகிறது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு நகை வாங்க வந்ததுபோல் வந்த 2 பெண்கள் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் நகை கடை ஓனர் புகார் அளித்தார். அதனடிப்படையில் தனிப்படை அமைத்து நகை திருடிய பெண்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக நகை கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண்கள் 2 பேர் கடைக்குள் வருகிறார்கள். கடை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாடலாக எடுத்து காட்டுங்க.. வேற டிசைன் காட்டுங்க.. என்று நகை வாங்குவது போலவே பாவ்லா காட்டுகிறார்கள். கடை ஊழியரும் வேறு டிசைன்களை எடுப்பதற்குள் நகையை நைசாக லவட்டி கொள்கிறார்கள். மேலும் கையில் ரெடியாக வைத்திருந்த போலி நகைகளை அங்கே மாற்றி வைத்துவிடுகிறார்கள்.
கடைசியாக, ஒரு டிசைனும் நல்லா இல்லையே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்கள். இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் முகத்தை மூடியபடி 2 பெண்கள் சென்று கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீசார் விசாரிக்கவும், மீனா ஜூவல்லரியில் திருடிய அதே பெண்கள்தான் இவர்கள் என்பதும் தெரியவந்தது.
வெள்ளூர் மாவட்டம் சேர்ந்த செல்வி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் 45 வயதாகிறது. இவர்கள் இருவரின் வேலையும், பஸ்ஸிலும், நகை கடைகளிலும் கொள்ளை அடிப்பதுதானாம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இவர்கள் மீது நிறைய திருட்டு கேஸ்கள் உள்ளன. நகைகளை திருடி, அதை வித்து சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களது வீடுகளில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான 102 கிராம் நகைகள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.