சிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த தனியார் பேருந்தில ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டுஇருந்தனர்.
ஒவ்வொரு ஊராக பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்த அந்த பேருந்து சிதம்பரம் அருகே வேளக்குடி என்ற கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியிருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்தது, பேருந்து கவிழ்ந்து விழுந்ததால், அதில் பயணம் செய்தவர்களில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தகிராம மக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர்.
அங்கு பல பயணிகள் இரத்த காயங்களுடன் பேருந்துக்குள் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காயமடைந்த 20 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.