கடலூரில் பெருவெள்ளம் : தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - வயலில் கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயி
பருவம் தவறி பெய்த மழையால் கடலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த வயலில் இறங்கி விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்: பாடுபட்டு பயிரிட்டு வளர்த்த சம்பா நெற்பயிர்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டதே என்று கண்ணீரில் கதறி துடித்தார் கடலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர். அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் 4 ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன. கடன்வாங்கி பயிரிட்டு இப்படி ஆகிவிட்டதே என்று வெள்ளம் சூழ்ந்த வயலில் விவசாயி அழுது துடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்த மழை, புயல் வெள்ளத்தையும் தாண்டி தப்பிப்பிழைத்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பருவம் தவறிய காலத்தில் பெய்த பெருமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மீண்டும் பேரிடரை சந்தித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் தலையில் இடியாக இறங்கியது.
அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள்
நிவர் புயல், புரேவி புயலுக்கு தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்தால் அத்தனையும் பாலாகி விடுமே என்று அஞ்சினர். அவர்கள் அஞ்சியது போலவே கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது மழை. பலமணி நேரம் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெற் பயிர்கள் மூழ்கின
குமளங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஜோதி என்பவர் அப்பகுதியில் 4 ஏக்கரில் சம்பா நெல் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் பருவம் தப்பிய கன மழையில் ஜோதி பயிரிட்டு இருந்த நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
விவசாயி அழுது புரண்டார்
இதைப் பார்த்த ஜோதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு லட்சம் அளவிற்கு கடன் பெற்று பயிரிட்ட நிலையில் தற்போது அறுவடை சமயத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதை கண்ட ஜோதி வயலில் இறங்கி வெள்ள நீரில் விழுந்து அழுது புரண்டார். இதனை பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மொபைல் போனில் விடியோவாக எடுத்துள்ளார்.
கலங்க வைக்கும் கண்ணீர் வீடியோ
இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்ப்பவர் நெஞ்சம் கலங்கும் அளவிற்கு அவர் அழுது புரளும் காட்சி விவசாயிகள் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.