கடலூர் மாவட்டத்தில் ஏப். 26-ல் முழு ஊரடங்கு- மருந்து கடைகளை தவிர அனைத்தும் மூடல்- ஆட்சியர் அதிரடி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டுக்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா உறுதியானது.
தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 9 பேர் என மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வந்த நிலையில், அதில் 15 பேர் பூரண குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 11 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தீவிர நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதனை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1,484 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1,233 பேருக்கு பாதிப்பு இல்லை. 225 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியிருக்கிறது.