2 குழந்தைகளின் கையில் சூடு போட்டு சித்திரவதை.. பெண் கைது
திட்டக்குடி அருகே 2 பெண் குழந்தைகளை சித்ரவதை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
திட்டக்குடி: 2 பெண் குழந்தைகளின் கையில் பழுக்க சூடு வைத்து சித்ரவதை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
திட்டக்குடியையை சேர்ந்தவர் சித்ரா. இவர் ஒரு இளம் விதவை. 9 வயது மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு சித்ரா ஆளானார்.
தெரிந்ததோ கூலி வேலை மட்டும்தான். கட்டுமான தொழிலாளியாக சென்னையில் வேலை பார்க்கிறார். அதனால் தனது உறவினர் சசிகலா என்பவரின் பாதுகாப்பில் இரு குழந்தைகளையும் விட்டுள்ளார்.
சசிகலா
இந்நிலையில், வீட்டில் அடிக்கடி இரு பெண் குழந்தைகளின் அலறல் சத்தம், அழுகை சத்தம் கேட்பதாக அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளை சசிகலா கொடுமைப்படுத்துவதாக சந்தேகம் இருப்பதாக கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தந்தனர்.
ஆண் நண்பர்
இதையடுத்து நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் அக்கம் பக்கத்தினர் சொன்ன தகவல்கள் உண்மைதான் என தெரியவந்தது. சசிகலா அந்த பெண் குழந்தைகளிடம் தன் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி உள்ளார். இதைதவிர சசிகலாவுக்கு ஜோதி ராமலிங்கம் என்ற ஆண் நண்பர் இருக்கிறாராம்.
சித்ரவதை
அவருடன் சேர்ந்து கொண்டு, மற்ற வீடுகளுக்கும் வேலை பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார். தங்களால் அங்கு வேலை செய்ய முடியவில்லை என்று குழந்தைகள் மறுக்கவும், அவர்களை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார்.
கையில் சூடு
அதில் ஒரு சிறுமியின் கையில் சூடு போட்டுள்ளார். இதனால் அவளது உள்ளங்கை பழுத்து வீங்கி உள்ளது. இதையடுத்து 2 சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு, சிறுமிகள் சமூக நல பாதுகாப்பு விடுதியில் சேர்க்கப்பட்டனர். உடனடியாக சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் நண்பர் ஜோதி ராமலிங்கத்தையும் தேடி வருகிறார்கள்.