திருமண வரவேற்பு முடிந்ததும் எஸ்கேப் ஆன மணமகன்.. திடீர் மாப்பிள்ளையான உறவுக்கார இளைஞர்..கடலூரில் தான்
கடலூர்: கடலூர் அருகே இரவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அதிகாலையில் மண்டபத்தில் இருந்து மணமகன் ஓடிவிட்டார். இதனால் திருமண விழாவுக்கு வந்த உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையானார்.
கடலூர் மாவட்டம் அருகே உள்ள உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 28- வயது இளைஞருக்கும் சிதம்பரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 25- வயதுடைய இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இரு வீட்டார் நிச்சயித்தபடி இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தையொட்டி இரு வீட்டினரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்து திருமண ஏற்பாட்டில் முழு வீச்சில் ஈடுபட்டு இருந்தனர்.
கோபிக்கு தெரிய வரும் எழில் திருமண விஷயம்.. ராதிகாவின் எதிர்பாராத பதில்.. நடக்கப்போவது இது தானா?
திருமண ஏற்பாடுகள்
திருமணத்தை ஒட்டி நேற்று முன் தினம் இரவு சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்களும் பங்கேற்று இருந்தனர். தடல் புடல் விருந்துடன் திருமண வரவேற்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே மண்டபத்தில் தங்கியிருந்தனர்.
காணாமல் போன மணமகன்
மறுநாள் காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனை திடீரென காணவில்லை. சிறிது நேரத்தில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், மணமகனை காணததால் திருமண வீட்டினர் பதற்றம் அடைந்தனர். மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தனர். எங்கும் மணமகனை கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியில் எங்கேயும் போயிருப்பாரோ என்று அங்கும் தேடி அலைந்தனர். அப்போது மணமகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஓடிப்போன மணமகன்
தொடர்ந்து விசாரித்த போது வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததுமே மாப்பிள்ளை மண்டபத்தில் இருந்து ஓடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன மணமக்கள் வீட்டினர் என்ன செய்வது என பதறிப்போகினர். இதற்கிடையே திருமண விழாவிற்கு உறவினர்களும் நண்பர்களும் வரத்தொடங்கினர். மாப்பிள்ளை ஓடிப்போனாலும் பரவாயில்லை திருமணத்தை திட்டமிட்டபடி நடத்தி விட வேண்டும் என்று மணமகளின் வீட்டினர் முடிவு செய்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்களது உறவினர்களிடமும் இது குறித்து பேசினர். அப்போது தங்களின் உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து பெண்ணின் வீட்டினர் இது குறித்து அவரிடம் கேட்டனர்.
உறவுக்கார இளைஞருடன் திருமணம்
அந்த உறவுக்கார இளைஞரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சற்று நேரத்தில் கெட்டி மேளம் கொட்டப்பட்டு திருமணம் சுபமாக நடைபெற்றது. நிச்சயிக்கப்பட்ட மணமகன் திடீரென ஓட்டம் பிடித்ததால் களையிழந்து சோகத்துடன் காணப்பட்ட திருமண நிகழ்ச்சி இதனால் மீண்டும் களை கட்டியது. திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் ஓடிப்போனதும் மறுநாள் உறவுக்கார இளைஞருடன் மணப்பெண்ணிற்கு திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்ற நிகழ்வும் கடலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.