பாப்பாவுக்கு வயசு என்ன.. நடுரோட்டில் பைக்கை மடக்கி.. தம்பதிக்கு மன உளைச்சலை தந்த எஸ்ஐ டிரான்ஸ்பர்!
சிதம்பரம் எஸ்ஐ உள்ளிட்ட 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
சிதம்பரம்: பாப்பாவுக்கு வயசு என்ன, வீட்டிலேயே விட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று டூவீலரில் வந்த தம்பதியை கேட்ட எஸ்ஐ உள்ளிட்ட 2 போலீசாரையும் எஸ்பி ஆயுத படைக்கு மாற்றி தூக்கி அடித்துள்ளார்.
சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்ஐ வேல்முருகனும், போலீஸ் சார்லஸும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த பக்கமாக மனைவி குழந்தைகளுடன், ஒரு இளைஞர் டூவீலரில் வரவும் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அந்நபர், "நான்தான் ஹெல்மட் போட்டிருக்கேனே" என்றார்.
இதான் சட்டம்
பிறகு, "இது பெயர் டூவீலர், 2 பேர்தான் வரணும், குழந்தைகளை கூட்டிட்டு வரக்கூடாது" என்று போலீசார் கூறினர். அதற்கு, அந்த நபர், "இது என்ன சார் அநியாயமா இருக்கு.. குழந்தைகளை எப்படி சார் வீட்டில் விட்டுட்டு வர முடியும்" என்று கேட்க, "அது உங்க பிரச்சனை, சட்டம் இதுதான்" என்றார்.
ஆர்சி புக்
மேலும் ஆர்சி புக் ஒரிஜினல்தான் வேண்டும் என்று கேட்டு கெடுபிடி செய்துள்ளார். அங்கிருந்த மக்கள் இந்த தம்பதிக்கு ஆதரவாக பேசியும், ஒரு கட்டத்தில் அந்த நபரின் மனைவி குழந்தைகளை காட்டி கெஞ்சியும் 2 போலீசாரும் மனம் இரங்கவில்லை. நடுரோட்டில் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாகவும் வெளிவந்தது.
அதிர்ச்சி
பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெல்மட், வண்டிக்கான பேப்பர்ஸ் இவ்வளவு இருந்தும் ஏன் போலீசார் இப்படி நடந்து கொண்டனர், சட்டம் என்னதான சொல்கிறது? டூவீலரில் குழந்தையை கூட்டிக் கொண்டு வரக்கூடாதா என்ற பல விவாதங்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன.
மாற்றம்
மக்களிடம் கடுமையான அதிர்வலைகளை அடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை கடலூர் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்பி அபினவ் உத்தரவிட்டுள்ளார். தம்பதியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக இவர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
புலம்பல்
எத்தனையோ போலீசார் தங்கள் கடமையை சரியாக செய்து வரும் நிலையில்.. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட பணியினை சிறப்பாக செய்து வரும்நிலையில்... இப்படி ஒன்றிரண்டு போலீசாரால் எல்லாருக்குமே கெட்ட பெயர் ஆகிறதே என்ற புலம்பலும் எழுந்து வருகிறது.