என்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் ரூ.40 கோடி இறக்கியிருக்காங்க... திருமா பகீர்
Recommended Video
சிதம்பரம்: தேர்தலில் தன்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் 40 கோடி ரூபாயை இறக்கி இருப்பதாக சிதம்பரம் மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
இன்று பரங்கிபேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன், தேர்தல் பிரச்சார குறுந்தகட்டினை வெளியிட்டார்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது: "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் நாடாளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என பாரதிய ஜனதாவினர் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
எனக்கு சிதம்பரம் தொகுதியில் தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் 40 கோடி பணத்தை இறக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம், நான் பாஜகவை எதிர்த்து பேசுவேன். அதிமுகவை எதிர்த்து பேசுவேன். மதவாதத்தை எதிர்த்து பேசுவேன். ஏழை மக்களுக்காக பேசுவேன். உழைக்கும் மக்களுக்காக பேசுவேன் தொழிலாளர்களுக்காக பேசுவேன். விவசாயிகளுக்காக பேசுவேன். எதையும் கண்டித்து பேசுவேன். எச்சரித்து பேசுவேன், பணியமாட்டேன் என்பதால்... இந்த ஆத்திரத்தில் அவர்கள் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கியுள்ளனர்" இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.