குடிகாரர்களை கிருமி நாசினி கொண்டு குளிப்பாட்டிய கடலூர் நகராட்சி.. வைரல் வீடியோ..
கடலூர்: கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக 3 கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்றிருந்த குடிகாரர்கள் மீது நகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையிலேயே கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து குடிகாரர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இவ்வளவு நாட்கள் கட்டுக்குள் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், தற்போது மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. முதல் நாளான நேற்று அடிதடி, குடும்ப பிரச்சினை, வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குடிகாரர்களால் அரங்கேற்றப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 143 கடைகளில், கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள 134 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கணவருக்காக மது வாங்க சென்ற பெண்... வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்
குறிப்பாக கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக சுமார் 3 கி.மீ தூரத்திற்கு குடிகாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள், லாரி மூலம் குடிகாரர்கள் மீது கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் இரண்டாவது நாளான இன்றும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடிகாரர்கள் குடை பிடித்துக்கொண்டு, நீண்ட காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
போராட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வாணமாதேவி கிராமத்தில் சோழத்தரம் காவல் நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.