பெட்ரோல் பங்க் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு...பணம் கொள்ளை... 3 கொள்ளையர்கள் கைது
Recommended Video
கடலூர் : சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்றிரவு, 3 பேர் ஒரு பைக்கில் வந்துள்ளனர். பைக்கிற்கு பெட்ரோல் போட்ட பின்னர், 3 பேரும் பங்க் ஊழியர் சிவசங்கரனுடன் பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர் பைக்கில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் கீழே இறங்கி ஊழியர் சிவசங்கரனை சரமாரியாக வெட்டினான். அப்போது, மற்றொருவன் சிவசங்கரன் கையில் இருந்த பணப்பையை பறிக்க முயன்றான். பணப்பையை தர மறுத்ததால் ஆத்திரத்தில் கொடூரமாக கை, கால்களில் வெட்டினான்.
சரமாரி வெட்டு
இதில், நிலைகுலைந்த சிவசங்கரன், அதே இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து பணப்பையை எடுத்துக் கொண்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டனர்.
3 பேர் கைது
இந்நிலையில் சாமியார் பேட்டை அருகே உள்ள பீச் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், 3 குற்றவாளிகளையும் பிடித்தனர். புதுச்சேரி கரிகாலன்குப்பத்தை சேர்ந்த அவர்களிடமிருந்து பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர் கொள்ளை
பின்னர், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், நேற்றுமுன்தினம் 3 பேரும் சிதம்பரம் புறவழிச் சாலையிலும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிசிடிவி காட்சிகள்
பறிக்கப்பட்ட பணப்பையில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் வரை பணம் இருந்ததாக தெரிகிறது.
படுகாயமடைந்த சிவசங்கர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் டி.எஸ்.பி. பாண்டியன், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே, சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவியாக இருந்ததாகக் கூறினார்.