கமல் கூட்டணி வச்சுக்கலாம்னு சொன்னாரு… நாங்க மறுந்துட்டோம்.. உண்மையை சொன்ன காம்ரேடுகள்
சிதம்பரம்:லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளதாக அதன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது. தனித்து போட்டி என்று அறிவித்த கமல்.. கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளையும் கூறி வருகிறார்.
இந்நிலையில் கமலஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிரகாஷ் கரத்தை சந்தித்து பேசினார்.அந்த சந்திப்பில் நடந்தது என்ன என்பது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
கூட்டணிக்காக அழைப்பு
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது:டெல்லியில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் சந்தித்து கூட்டணிக்காக அழைப்பு விடுத்ததார். ஆனால் கமலின் அழைப்பை பிரகாஷ் கரத் நிராகரித்துவிட்டார்.
வலுவான அணி அமைப்பு
கமலிடம் இது பற்றி பேசிய பிரகாஷ் கரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.
தொகுதி பேச்சுவார்த்தை
அதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
வாய்ப்பு இல்லை
எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்திலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று பிரகாஷ் கரத், கமலிடம் கூறி இருக்கிறார். ஆகையால்.. கூட்டணி பற்றிய அழைப்பை நிராகரித்து விட்டோம் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.