தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா?
கடலூர்: உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திமுக பிரமுகர் ஒருவர் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
இதிலும் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெற்றது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கு தனியே தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்
இதிலும் மாவட்ட, கிராம, ஒன்றியங்களுக்கு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறி களேபரங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம்பரங்கிப்பேட்டை அருகே சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபெருமாள். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார்.
வித்தியாசம்
ஒன்றிய திமுக செயலாளராக உள்ள இவர் கடலூர் மாவட்ட 25 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் திருமாறன் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகளில் திருமாறன் வெற்றி பெற்றார். வெறும் 3ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முத்து பெருமாள் தோல்வி அடைந்தார்.
பிரியாணி விருந்து
தோல்வி அடைந்தாலும் முத்து பெருமாள் துவண்டு போகவில்லை. அதிமுக மீது குற்றமும் சாட்டவில்லை. மறுநாளே தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு அந்த மக்களிடம் பிரியாணி விருந்து வைப்பதாக சொல்லியிருந்தார். அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி விருந்து வைத்தார்.
மக்கள் குறைகள்
சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து முத்து பெருமாள் கூறுகையில் 20 ஆண்டுகளாக நான் திமுகவில் உறுப்பினராக இருக்கிறேன். 2006-ஆம் ஆண்டு கவுன்சிலர் பதவி வகித்தேன். அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தேன். அதற்கு மனம் வருந்தாமல் மக்களுக்கு பிரியாணி விருந்தளித்தேன். அந்த மக்களின் குறைகளையும் கேட்டறிந்தேன் என தெரிவித்தார்.