பாஜக பெரிய மண் குதிரை.. கேப்டன் இல்லாத கப்பலாக தள்ளாடும் அதிமுக.. அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசல்
கடலூர்: ‛‛தமிழகத்தில் அதிமுக கேப்டன் இல்லாத கப்பல்போல் சென்று கொண்டுள்ளது. பாஜக ஒரு மண் குதிரை. பாஜகவை நம்பி போகிறவர்கள் மண் குதிரையில் சென்று ஆற்றுக்குள் இறங்குவதற்கு சமம். பாஜக ஒரு பெரிய மண் குதிரை. பாஜகவில் யார் சேர்ந்தாலும் அது அவர்களுக்கு ஆபத்தாக தான் முடியும்'' என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு கருத்தரங்கம் இன்று நடந்தது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கதிரேசன், பதிவாளர் சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாநாடு-கருத்தரங்கை துவக்கி வைத்தார். விழா முடித்து அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி அடகில் அதிமுக! லேடியா? மோடியா? எனக்கேட்ட ஜெயலலிதாவை மறந்துட்டாங்க! கி வீரமணி விளாசல்
கேப்டன் இல்லாத கப்பல்
தமிழகத்தில் அதிமுக கேப்டன் இல்லாத கப்பல்போல் சென்று கொண்டுள்ளது. அவர்களுக்கு கொள்கையும் இல்லை. கோட்பாடும் இல்லை. இப்போது தலைமையும் இல்லை என்ற அவல நிலையில் சென்று கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. அதிமுக பொதுக்குழு மேடையில் சிவிசண்முகம் நடந்து கொண்டது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை. உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.
வளர்ச்சி பாதையில் தமிழகம்
ஆனால் இன்றைக்கு தமிழகத்திற்கு வழிகாட்டுகின்ற இயக்கமாக திராவிட இயக்கத்தின் ஒரு அடித்தளமாக திமுக, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்று திரட்டி உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நமது முதல்வரின் தலைமையில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைவரையும் இணைத்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் இந்த அதிமுக சலசலப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பாஜகவுக்கு இடமில்லை
அதிமுகவில் தலைமை இல்லை. அதனால் இப்படித்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எங்கு சரியான தலைமை இல்லையோ அங்கு இது போன்ற பிரச்சனைகள் இருப்பது சகஜமான ஒன்று. சரியான லீடர்ஷிப் இல்லை என்பதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி பற்றி சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடமில்லை. காரணம் தமிழகம் திராவிட இயக்கத்தை முன்னெடுக்கின்ற மாநிலம். பாஜகவை நம்பி போகிறவர்கள் மண் குதிரையில் சென்று ஆற்றுக்குள் இறங்குவதற்கு சமம். பாஜக ஒரு பெரிய மண் குதிரை. அதனை நம்பினால் ஆற்றில் இறங்குவதற்கு சமம். யார் பாஜகவில் சென்று சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆபத்தாகத்தான் முடியும்.
இன்டெர்நெட் வசதியில் சரித்திர சாதனை
கடந்த ஆட்சியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொழில்நுட்பத்தை பயன்பாடு சரியாக செயல்படுத்தப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இருக்கிறது. கிராமப்புற பகுதிகளுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. பைபர் கேபிள் மூலம் இன்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் இன்றைக்கு சரித்திர சாதனையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வெகு விரைவில் அது முழுமை பெற்று தமிழ்நாட்டில் பயன்பாட்டிற்கு வரும். இதனால் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான இன்டர்நெட் சேவை கிடைக்கின்ற ஒரு சூழல் உருவாகும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம்
தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் பல்வேறு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருகிறார். அதனால் பல தொழிற்சாலைகள் இன்றைக்கு தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. படித்த மாணவர்களுக்கு இன்று தொழில்நுட்பத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.