என்எல்சி மருத்துவமனையில் குண்டு வெடிக்க போகுது.. மர்ம கடிதத்தால் பரபரப்பு!
கடலூர்: நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசால் 1957 ஆம் ஆண்டு என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது நெய்வேலியில் மூன்று சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 2.85 கோடி டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்தும், நான்கு அனல் மின் நிலையங்கள் மூலம் மணிக்கு 28.90 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரத்தை அளித்து வருகிறது. மேலும் 1000 மெகாவாட் அளவிலான சூரியஒளி மின் திட்டத்தையும், 51 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தையும் இந்நிறுவனம் நெய்வேலியில் செயல்படுத்தி வருகிறது.
என்எல்சி நிறுவன வளாகத்தில் பொது மருத்துவமனை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு என்எல்சியில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடனே காணப்படும்.
இந்நிலையில் இன்று என்எல்சி மருத்துவமனைக்கு பெயர் குறிப்பிடாமல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், என்எல்சி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து கடலூரில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மருத்துவமனையில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதனால் மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பீதியடைந்தனர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இருப்பினும் என்எல்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நெய்வேலியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.