முழு போதை.. தாறுமாறாக வந்த பைக் மோதி சிறுவன் பரிதாப பலி.. கொதித்தெழுந்த பொதுமக்கள்!
கடலூர்: போதையில் இளைஞர் பைக் ஓட்டியதில் சிறுவன் பலி.. மதுக்கடையை மூடுமாறு உடலை வாங்க மறுத்து மறியல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
குடிபோதையில் வந்த இளைஞர்களால் விபத்தில் சிறுவன் பலியானதை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வார்த்தில் விசாரணை
விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடையை மூடும்வரை சிறுவன் உடலை வாங்கமாட்டோம் என மறியல் செய்தனர்.
வேகமாக வந்த இருசக்கர வாகனம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே. கோபுராபுரம் கிராமத்தில் சற்குணம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், அஜய் என்ற 8 வயது மகனும், அஜிதா என்ற கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மஞ்சுளா, அஜய், அஜிதா மற்றும் உறவினர் 4 பேரும் உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே 3 இளைஞர்களுடன் இருசக்கர வாகனம் வேகமாக வந்தது. சாலையில் குறுக்கிலும், நெடுக்கிலுமாக நிதானம் இன்றி வந்த அந்த வாகனத்தை பார்த்து 4 பேரும் சாலையோரமாக ஒதுங்கினர். ஆனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் 4 பேர் மீதும் வேகமாக மோதினார்.
பைக் மோதியதில் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மஞ்சுளா மற்றும், அஜித் மற்றும் உறவினர் 3 பேரும் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அஜயின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை வழக்காக பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் யார் என பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் என தெரியவந்தது. ராஜேஷ் விபத்து நடந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.
குடிபோதையில் ஓட்டிய பைக்
நிதானம் இழக்கும் அளவுக்கு மது குடித்த ராஜேசும் அவரது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் குடிபோதையில் வாகனம் இயக்கியதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் இங்கிருக்கும் டாஸ்மாக் கடைதான் என்றும், இதனால் ஒரு சிறுவன் உயிர் போய்விட்டதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். தகவல் அறிந்து டாஸ்மாக் கடைக்கு அருகில் வந்த அஜயின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றினால்தான் அஜயின் உடலை வாங்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கோட்டாட்சியர் உறுதி
இதையடுத்து விரைந்த போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து மறியலை கைவிட்டு கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுபான கடையை மூடினால்தான் அஜயின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொள்வோம் எனக் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.