"எப்பவுமே நீ தரையிலதான்.." கலங்கி போன ராஜேஸ்வரி.. அசிங்கம் பிடித்த "ஜாதி வெறி".. சிதம்பரத்தில் ஷாக்!
சிதம்பரம் பெண் ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை நடந்துள்ளது
கடலூர்: "எப்பவுமே நீ தரையிலதான் உட்காரணும்.. நான்தான் எல்லாத்தையும் செய்வேன்"ன்னு மோகன் சொல்லுவார்.. அதனால எந்த பஞ்சாயத்து கூட்டம் நடந்தாலும் கீழேதான் உட்கார்ந்திருப்பேன் என்று கண்கலங்கி சொல்கிறார் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர்தான் ராஜேஸ்வரி... பட்டியலினத்தை சேர்ந்தவர். துணைத்தலைவராக இருப்பவர் மோகன்.
கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி ஊராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.. இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் உட்கார வைத்துள்ளனர். அந்த போட்டோவில் மற்ற எல்லாருமே சேரில் உட்கார்ந்திருக்க, தலைவரான ராஜேஸ்வரி மட்டும் தரையில் ஒரு ஓரமாக வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கிறார்.. இது சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவி பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோகன்
இதையடுத்து, ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மோகன் மீது புவனகிரி போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை மோகன் அவமானப்படுத்தி வந்தது தெரியவந்தது. பின்னர், துணைத்தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. அதேபோல, ஊராட்சிமன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார்
இதை பற்றி ராஜேஸ்வரி சொல்லும்போது, பஞ்சாயத்து கூட்டத்தின்போதெல்லாம் தரையில்தான் நீ உட்காரணும்னு , எதுவா இருந்தாலும் நான்தான் செய்வேன் என்று மோகன் சொல்லிடுவார்.. அதனால எப்பவுமே நான் கீழேதான் உட்கார்ந்திருப்பேன்..கொடி ஏத்தும்போதுகூட என்னை ஏத்தவே விடமாட்டார்.. அவர்தான் ஏத்துவார்.. ஒரு அளவுக்கு மேல என்னால தாங்க முடியாமதான் ஸ்டேஷன் வரை வந்து புகார் தந்துட்டேன்" என்கிறார்.
கலெக்டர் சந்திரசேகர்
கடலூர் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது. இவ்வளவு நடந்தும், மேலதிகாரிகளுக்கு புகார் தராத ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் இதை பற்றி சொல்லும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இப்போதுதான் போலீசில் புகார் தரப்பட்டது.. நடந்த சம்பவமும் உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது... இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக எஸ்பி அபினவுடன் அந்த ஊராட்சிக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
தலித் பெண் தலைவர்கள்
சமீப காலமாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து அவமரியாதை செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டிருந்தார். இதற்கு பிறகு, சுல்தான்பேட்டையில் பக்கம், ஜே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா அவமானப்படுத்தப்பட்டார்.
அதிருப்தி
"நீ ஒரு தலித்.. அது எப்படி சேரில் உட்காருவே?" என்ற ஒரே வார்த்தைகளைத்தான் பாதிக்கப்பட்ட இந்த ஊராட்சி பெண் தலைவர்கள் அனைவருமே சொல்லும் குற்றச்சாட்டாக இருக்கிறது.. தொடர்ந்து பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்கள் அவமதிக்கப்பட்டு வருவது மக்களை கடுமையான அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.