சென்னை மக்களே குட் நியூஸ்.. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது
Recommended Video
கடலூர்: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர் குறைந்ததால் மக்கள் தண்ணீர் லாரிகளை புக் செய்து தண்ணீர் பெற ஏற்பாடு செய்தனர்.
ஆனால் தண்ணீர் லாரிகள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து தண்ணீர் லாரிகள் நகர் பகுதிக்குள் 24 மணிநேரமும் வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஒடிஷா புயல் பாதிப்பு.. உடனே கிளம்பிச் செல்கிறார் பிரதமர் மோடி!
கல்குவாரி தண்ணீர்
அதேநேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டன. இதனால் கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை சுத்திகரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
வீராணம் ஏரி
வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமம் வரை விரிந்து கிடக்கிறது. 11 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட வீராணம் ஏரியின் மூலம் 50,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சென்னைக்கு குடிநீர்
அதுமட்டும் அல்லாமல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வறண்டு போன வீராணம் ஏரிக்கு தொடர் மழை மற்றும் கர்நாடக அணை நிரம்பியதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்ணீர் வரத்து தொடங்கியது.
கொளுத்தும் வெயில்
இதனால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பின் சென்னைக்கு குடி நீர் அனுப்பும் பணிகள் துவங்கின. 3 நாட்கள் முழு கொள்ளளவில் இருந்த தண்ணீர் அளவு பின்னர் குறைந்தது. கூடவே கொளுத்தும் வெயிலால் ஏரியின் நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது.
மேட்டூர் தண்ணீர்
ஏரியின் மொத்த கொள்ளளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடி தண்ணீர் கடைசியில் 550 மில்லியன் கன அடியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மேட்டூரில் இருந்து மீண்டும் தண்ணீர் பெற்று வீராணம் நிரப்பும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
நிம்மதி பெருமூச்சு
இதையடுத்து வீராணம் ஏரி தற்போது ஆயிரத்து 163 புள்ளி 36 மில்லியன் கன அடி கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியுள்ளதால் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கட்டுக்குள் வரும் என நிம்மதி தெரிவித்துள்ளனர் குடிநீர் வாரிய அதிகாரிகள்.