நிலத்துக்கு நாங்க அல்லாட..உங்களுக்கு குத்தாட்டம் கேட்குதோ! நள்ளிரவு ஆபாச நடனம்! எல்லை மீறிய என்எல்சி
கடலூர் : கடலூர் என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் சுரங்கம் அருகே குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது
64 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணையும் மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தன்னூத்தாக இருந்த கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 8000 அடிக்கும் கீழே சென்று விட்டதாக புகார் கூறப்படுகிறது.
என்எல்சி நிறுவனம் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சியதால் தற்போது கடலூர் மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றி விட்டது. இதற்கு முழு காரணமும் என்எல்சி தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்எல்சி நிறுவனம் வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கொடிய துரோகம்.. பொங்கிய டிஆர் பாலு! நேராக மத்திய அமைச்சரிடம் முறையீடு.. பெரிதாகும் என்எல்சி விவகாரம்
என்.எல்.சி நிறுவனம்
கடலூர் என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என போராட்டங்களும் அரங்கேறி வருகிறது. நவரத்தின அந்தஸ்த்துடன் இந்தியாவின் மிகப் பெரிய அரசு நிறுவனமாக என்எல்சி இந்தியா செயல்பட்டு வருகிறது.
நிலம் கையகப்படுத்த திட்டம்
தற்போது வரை 50 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து வரும் நிலையில் நிலம் கொடுத்த மக்களுக்கு உறுதியளித்தபடி என்எல்சி இந்தியா நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் தற்போது புதிய சுரங்கத்திற்காக 27 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த என்எல்சி திட்டமிட்டு இருக்கிறது. இதனையடுத்து அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
மக்கள் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கரிவெட்டி கிராமத்திற்கு என்எல்சி அதிகாரிகள் நிலம் மனை அளவீடு செய்ய வருகை தந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள், கிராம எல்லையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பொதுமக்களுடன் என்எல்சி அதிகாரிகளுக்கு, எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடல் பாடல்
தற்போதைய சூழ்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலம் மற்றும் வீடுகளை இழந்த கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் தற்போது போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் கடலூர் என்எல்சி சுரங்கம் அருகே விதிமுறைகளை மீறி அதிகாரி ஒருவருக்காக ஆடல் பாடல் குத்தாட்டம் என கொண்டாட்டங்கள் நடைபெற்றது கடலூர் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரிவு உபச்சார விழா
சண்டிகரைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு என்எல்சி நிதித்துறை இயக்குனராக பணியில் சேர்ந்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு பணி உயர்வு பெற்ற அவர் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா வழங்க திட்டமிட்ட அதிகாரிகள் சிலர் உற்சாக குத்தாட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார். அரைகுறை ஆடையுடன் பெண்கள் சிலர் குத்தாட்டம் போட்ட ஆடல் பாடல் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆபாச நடனமாடும் பெண்களை அதிகாரிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதை கண்ட கடலூர் மக்கள் கடும் கோபத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
கடும் நடவடிக்கை
நிலத்தையும் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாங்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அதிகாரிகளுக்கு குத்தாட்டம் கேட்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நிரந்தர வேலை இன்றி நிலத்திற்காக நாங்கள் போராடிவரும் நிலையில் வடமாநில அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்தி பாடல்களும் குத்தாட்டமும் கேட்கிறதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி வாசிகள் தொழிலக விதிமுறைகளை மீறி குத்தாட்டம் நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.