கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்ளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். அதன்படி டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கண்டறியப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் 16 பேரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 8 பேரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேரும் சிகிச்சைசாக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பண்ருட்டியை சேர்ந்த 2 பேர் மற்றும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்றுதான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மீதமுள்ளவர்களின் இரத்த பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளன. இதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், வடலூர் பகுதியை ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 8 பேரின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவித்து, அந்த பகுதியில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்த 3 ஆயிரத்து 613 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்து இறந்துபோன, ராஜவள்ளி என்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.