கொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாா்டுகளில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் 31 பேர் கடலூர் திரும்பி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பபட்டது.
இந்நிலையில் இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்த 3 பேருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 64 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று அவரவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளது தெரியவந்தது. இவர்களில் 55 பேர் சுகாதாரத்துறையினரால் கண்டறியப்பட்டனர்.
இவர்களில் 25 பேர் தற்போது விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 55 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானதில், 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 6 கூடியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த கோரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.