புட்டபர்த்தி சென்று திரும்பிய சாயிபாபா பக்தருக்கு கொரோனா.. கடலூர் மக்கள் அச்சம்!
கடலூர்: புட்டபர்த்தி சென்று திரும்பிய கடலூர் சாயிபாபா பக்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் 18 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேர் மட்டுமே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் புட்டபர்த்தி சென்று திரும்பிய கடலூர் சாயிபாபா பக்தர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாயிபாபா கோயில் உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாயிபாபாவை தரிசனம் செய்ய வருகின்றனர்.
புட்டபர்த்திலேயே தங்கி சேவை பணியிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புட்டபர்த்தி சாயிபாபா கோவிலுக்கு சென்றனர். அவர்களில் கடலூர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே ரங்கநாதன் நகரைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவரும் சென்றிருந்தார்.
இதனிடையே சாயிபாபா கோயிலில் தங்கியிருந்த பக்தர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புட்டபர்த்தியில் இருந்து சேலம் திரும்பிய ஒரு நபருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைனையடுத்து புட்டபர்த்தியில் இருந்து திரும்பிய தமிழக பக்தர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இதில் கடலூரைச் சேர்ந்த 69 வயது முதியவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது மனைவி, இரண்டு பேரக்குழந்தைகளும் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அவர் வசித்து வந்த ரங்கநாதன் நகர், கடற்கரை சாலை, அண்ணா நகர் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. சாயிபாபா பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தால், கடலூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.