கூலிங் கிளாஸ் போட்டு வந்த அழகேசன்.. அடித்து நொறுக்கிய வெறிக்கூட்டம்.. தாயாருக்கும் பலத்த அடி!
கூலிங் கிளாஸ் அணிந்து வந்த தலித் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
கடலூர்: பட்டியலினத்தை சேர்ந்த அழகேசன் கூலிங்கிளாஸ் போட்டுட்டு வந்ததுதான் இவர்களுக்கு பிரச்சனை ஆகிவிட்டது! "கூலிங்கிளாஸ், சட்டையை போட்டுட்டு எங்க முன்னாடி உனக்கு வர்ற எவ்வளவு தைரியம்" என்று கேட்டு, இளைஞரையும், அவரது அம்மாவையும் 3 பேர் தாக்கி உள்ள சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது எம்.பட்டிக்குடிகாடு என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர்தான் அழகேசன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
போன சனிக்கிழமை அழகேசன் சட்டை, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வேறு சமூகத்தை சேர்ந்த சத்யராஜ், கோபி, பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் வழி மறித்தனர்.
"எவ்ளோ தைரியம் இருந்தால், எங்க முன்னாடி கூலிங் கிளாஸ் போடுவே.. கழட்டு அதை.. முதல்ல பைக்கில் இருந்து கீழே இறங்கு.. எங்க முன்னாடி வண்டி ஓட்டக்கூடாது.. தள்ளிட்டுதான் போகணும்" என்று சொல்லி, அவரை தாக்கியும் உள்ளனர். மேலும் அழகேசனின் தாய் அன்னக்கிளியையும் அந்த 4 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தாய்-மகன் இருவருமே படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தோர் இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இப்போது இருவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இந்நிலையில் அழகேசன் போலீசில் புகார் அளிக்கவும், அதன்பேரில் விசாரணை நடந்துள்ளது.
ஆனால் பெயரளவுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக கூறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரப்பட்டனர். அத்துடன், 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டரை முற்றுகையிட்டு, தங்கள் கோரிக்கையையும் கலெக்டரிடம் தந்தனர். இதையடுத்து, கலெக்டர் அன்புசெல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அதன்படியே தாக்குதல் 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கோபியை தேடி வருகிறார்கள்.