பீஸ்ட் பட ஸ்பெஷல் ஷோ டிக்கெட் கேட்டு கடலூரில் ரசிகர்கள் மறியல்.. போலீஸார் தடியடியால் பரபரப்பு
கடலூர்: பீஸ்ட் படத்திற்காக கடலூரில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பீஸ்ட்: “அரசு பதவிகளில் உள்ளோரை விமர்சிக்க வேண்டாம்” - விஜய் சார்பில் அறிக்கை
பொதுவாக ரசிகர்களுக்கென சிறப்பு காட்சி ஒளிபரப்பப்படும். அந்த வகையில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கான டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சீனு தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் அண்ணா பாலம் அருகில் உள்ள தியேட்டருக்கு சென்றனர்.

தியேட்டர் ஊழியர்கள்
அப்போது தியேட்டர் ஊழியர்கள், ரசிகர் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டை தற்போது கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கடலூர் பாரதி சாலைக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீஸார்
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபடக் கூடாது, கலைந்து செல்லுமாறு கூறினர். எனினும் ரசிகர்கள் டிக்கெட் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.

விஜய் ரசிகர்கள்
அப்போது போலீஸாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ரசிகர்கள் தெறித்து ஓடினர். எனினும் சிலர் கலைந்து செல்ல மறுத்தனர்.

பதற்றமான சூழல்
இதையடுத்து அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியான ராம் முத்துராம் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் இருக்கைகளை துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.