வார்ம் அப் செய்த போது ஷாக்.. ஆணழகன் போட்டியில் சுருண்டு விழுந்த இளைஞர்.. கடலூரில் சோகம்
கடலூர் மாவட்டம், வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட ஹரிகரன் என்ற 21 வயது இளைஞர் வார்ம் அப் செய்த போது உயிரிழந்தார்.
கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட ஹரிகரன் என்ற 21 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் ஹரிகரன் வார்ம் அப் செய்தபோது சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.. வடலூரில் உள்ள பிசிகோ பிட்னஸ் சார்பில் இந்த போட்டி நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்பதற்காக சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்பவர் வந்திருந்தார். 75 கிலோ எடை பிரிவில் மேடை ஏற தயாரான ஹரிஹரன், மேடை ஏறுவதற்கு முன்பு மண்டபத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார்.
ஜிம்மில் ஒர்க்அவுட்.. சுருண்டு விழுந்து போலீஸ்காரர் சாவு.. மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்யணும்?
வழியில் உயிரிழப்பு
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக இளைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். அவரை உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவனைக்கு இளைஞர் ஹரிகரனை விழாக்குழுவினர் கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். ஹரிகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடற்பயிற்சி காரணமா?
ஹரிகரனின் உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டதால் உயிரிழந்தாரா, அல்லது உணவு கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி செய்ததால் உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
பிரேத பரிசோதனை
உணவாக பிரெட் சாப்பிட்ட போது பிரெட் உணவுக்குழாயில் அடைத்து அதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே ஹரிகரன் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். ஆணழகன் போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரடைப்பு ஏன்
அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மாரடைப்பு ஏன் வருகிறது? "இதய வால்வுகளில் பிரச்னை, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திடீர் மாரடைப்பு உண்டாகிறது. இதுதவிர, அதிகமாக உடற்பயிற்சி (வார்ம்அப் எடுத்துக் கொள்ளாமல்) செய்பவர்களுக்கும், திடீரென கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் பொழுதுபோக்குக்காக விளையாடும் மாணவர்களுக்குப் படபடப்பு, மூச்சுத்திணறல், மயக்கம், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதேபோல, பெற்றோர் அல்லது தங்களது பரம்பரையில் யாருக்காவது சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருந்தால் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.