இரு கால்கள் துண்டித்து.. தலை சிதைத்து.. சென்னை டிரைவர் படுகொலை.. உடலை ஆந்திரத்தில் வீசிய கும்பல்
கடலூர்: கடலூரில் கடந்த வாரம் கடத்தி செல்லப்பட்ட டிரைவர் ஒருவர் 2 கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகன் வினோத்குமார் (27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
தீபாவளியை கொண்டாட கடந்த வாரம் சொந்த ஊரான செம்மண்டலத்திற்கு வந்தார். கடந்த 16-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தியது.
அருள்மொழியின் தந்தை
இதை கண்ட அருள்மொழியின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வினோத்குமாரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பலையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராமாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
கடலூர் போலீஸார்
மேலும் அந்த இளைஞரின் சடலம் அருகே ஒரு அடையாள அட்டை இருந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். அந்த அட்டையில் வினோத்குமார், செம்மண்டலம், கடலூர் மாவட்டம் என இருந்தது. இதையடுத்து ராமாபுரம் போலீஸார் கடலூர் போலீஸாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
கடலூர் போலீஸார் விசாரணை
அப்போது வினோத்குமாரை 5 பேர் கடத்திச் சென்றதாகவும் அவரை தேடி வருவதாகவும் கடலூர் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து இறந்து கிடந்தது வினோத்குமார்தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் ஆந்திராவுக்கு கடலூர் போலீஸார் விரைந்தனர்.
தலை சிதைப்பு
அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, தலை சிதைக்கப்பட்டும் மிக கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். வினோத்குமாரை வேனில் கடத்திச் சென்று கொலை செய்தார்களா, அல்லது தமிழகத்தில் கொன்றுவிட்டு ஆந்திரத்தில் வீசிவிட்டனரா என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ராமாபுரம் போலீஸார் விசைரணை நடத்தி வருகிறார்கள்.